வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டுப்பிரசுர குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் கைது!!

680

வவுனியா மாவட்டத்தினை தளமாக கொண்டு இயங்கும் தினப்புயல் பத்திரிகையில் அலுவலக செய்தியாளர் இ.தர்சன் என்பவரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் (02.11.2018) கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவரை பார்வையிடச் சென்ற சக ஊடகவியலாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு ஊடகவியலாளர் இ.தர்சன் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்ற போது பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் தொடர்பாக அவரின் இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை கேள்வியுள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம், இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் உள்ள ஊடகவியலாளரை சந்திப்பதற்கு சந்திப்பதற்கு அனுமதி கோரிய சமயத்தில் பொலிஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடுப்புக்காவலிலுள்ள ஊடகவியலாளரிடம் சம்பவத்தை அறிவதற்கும் அவரது பக்க நியாயத்தை கேட்பதற்கும் ஊடகவியலாளர்கள் பலதடவைகள் முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் நள்ளிரவு 1 மணிவரை காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்

குறித்த ஊடகவியாளார் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் பணியாற்றும் ஊடகத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது,

அண்மையில் வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச் செல்லும் போது தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அவரை பார்வையிடுவதற்கு மறுப்பும் தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.