வவுனியாவில் இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

684

வவுனியாவில் மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (09.11) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து செட்டிக்குளம் பெரியகட்டு ஊடாக மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர்களில் ஒன்று மாடு குறுக்காக பாய்ந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த மற்றைய டிப்பர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் இவ் விபத்துக் குறித்து செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள்
மன்னார் நானாட்டான் பகுதியிலிருந்து பெருமளவான மாடுகள் செட்டிக்குளம் பெரியகட்டு பகுதிக்கு ஓட்டிவரப்பட்டு மேய்ச்சலுக்கு விடப்படுவதால் இதன் காரணமாக பெருமளவிலான விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருகிறது.

இன்று மட்டும் நான்கு விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கால்நடைகளை கட்டுப்படுத்த செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.