நடிகை டாப்சி ரன்னிங் ஷாதி டாட்காம் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். இது இந்தியில் அவருக்கு இரண்டாவது படம். இப்படத்துக்கு பிறகு இந்தியில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழ், தெலுங்கு படங்களில் இனிமேல் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வந்தன.
சமீபத்தில் ரிலீசான ஆரம்பம் படத்தில் டாப்சி நடித்து இருந்தார். முனி 3ம் பாகம் படத்திலும் நடிக்கிறார். இவை தவிர வேறு தமிழ் படங்கள் அவருக்கு இல்லை. தமிழ் படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று டாப்சியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது..
மூன்று வருடங்களுக்கு முன் இந்திப் படங்களில் மட்டும் தான் நடிப்பீர்களா என்று கேட்டு இருந்தால் ஆமாம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது நிலைமை வேறு. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து நல்ல இடத்தை தக்க வைத்துள்ளேன். எனவே இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என சொல்ல இயலாது.
தமிழ் தெலுங்கு படங்களில் நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்துவேன் இவ்வாறு டாப்சி கூறினார்.