மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனுக்கு விளக்கமறியல்!!

718

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.எஸ்.நயீம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்குடியிருப்பு, இத்திக்குளம், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் போதையில் வீட்டுக்குச் சென்று தனது மனைவியிடம் பணம் கேட்டு அவரை தாக்கி காயப்படுத்தியதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைபாட்டிற்கமைய சம்பூர் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தேவநகர், புளியம்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இவ்வருடம் மார்ச் மாதம் பழைய குரோதம் காரணமாக ஒளிந்திருந்து நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நிலையிலே எட்டு மாதங்களின் பின்னர் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.