வவுனியா நகரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் பிசுபிசுத்தது!!

909

வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாததால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பிசுபிசுத்துள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் இன்று 19.11.2018 திங்கட்கிழமை நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக கடந்த 17.11.2018 சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இடம்பெற்ற அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் நகரசபைக்கான நிர்வாகக்கூட்டம் இடம்பெற்று இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் அடிப்படையில் நகரசபையினுடைய தலைவர் எமது சங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தாலும் தற்போதைய நிலையில் எமது சங்கம் இன்று திங்கட்கிழமை 19.11.2018 நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்குபெறுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இன்றைய தினம் எமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் சகலரும் வேலைக்கு சமூகமளிப்போம் என்பதை அறியத்தருவதுடன் வேலை செய்வதற்காக வாகன ஒழுங்குகளை எமக்கு செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் தங்களினால் எற்கனவே கடிதங்கள் மூலம் விடுக்கப்பட்டிருக்கின்ற கோரிகைகளான தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை, மலசலகூடம் சீர்திருத்தம் போன்ற இரு கோரிக்கைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரிகின்றோம் என்று தெரிவித்து அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தில் உயர் பீட உறுப்பினர் இராமு. சூரியகுமாரினால் நகரசபை தலைவர், செயலாளர், உப நகர பிதா ஆகியோருக்கு கடந்த 17ஆம் திகதி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 7 மணியளவில் அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் வேலைக்கு சமூகமளித்த நிலையில் அவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டபோது இருதரப்பினருக்கும் இடையே முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபை தவிசாளர், உப நகரபிதா, நகரசபை செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரடுமுடியவில்லை.

நகரசபை ஊழியர்களின் ஐந்து பேர் கொண்ட குழுவினர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பணிக்குச் செல்லும் ஊழியர்களை தடை செய்வதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் குறித்த ஐந்து பேர் கொண்ட குழுவினரிடம் பணிக்குச் செல்பவர்களை தடை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இதன் பின்னர் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் காலை 8 மணியளவில் பணிகள் வழமைக்குத்திரும்பியதால் இன்றைய கவனயீர்ப்பு பிசுபிசுத்துள்ளது.