கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 2 குழந்தைகள் : சோக சம்பவம்!!

304

வேலூர் அருகே மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (35). நகைக்கடை நடத்தி வரும் ஹரி கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக குமாரி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மதியழகன் என்ற மகனும், 3 வயதில் சோபியா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே மர்ம காய்ச்சலால் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியினர், உடல்நிலையில் சரிவர முன்னேற்றம் ஏற்படாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

நேற்று மாலை திடீரென இருவருக்கும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக காய்ச்சல் முற்றி ஹரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்தது கூட தெரியாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குமாரியும் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கும் வேளையில், இரண்டு குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.