வேறு மதத்தில் திருமணம்…. மகளை கடத்திச் சென்ற தாயார் : மன நல காப்பகத்தில் ஒப்படைத்த கொடூரம்!!

302

கொடூரம்

இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் சொந்த மகளை கடத்தி சென்ற தாயார் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் மனைவி நஸ்லா என்ற இளம்பெண்ணையே அவரது தாயார் கடத்தி சென்று தமிழகத்தில் உள்ள மன நலகாப்பகம் ஒன்றில் சிறை வைத்துள்ளார்.

தற்போது கணவர் விவேக் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கணவருடன் சேர்ந்து வாழ ஒப்புதல் அளித்துள்ளது. மட்டுமின்றி சொந்த மகளை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்த தாயார் மற்றும் உறவினர்களுக்கு தண்டனையும் அறிவித்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் விவேக் மற்றும் இஸ்லாமியரான நஸ்லா ஆகிய இருவரும் நண்பர்கள் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரிடம் இருந்தும் சம்மதம் கிடைக்கவில்லை.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னர் விவேக் தமது பெற்றோரிடம் இருந்து அனுமதி வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை 12 ஆம் திகதி கோழிக்கோடு பகுதியில் உள்ள கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 6 மாதங்கள் கடும் நெருக்கடிக்கு இடையே குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி நஸ்லா பேருந்து நிலையத்தில் இருந்து அவரது தாயாரால் கடத்தப்பட்டார். காரில் கடத்தப்பட்ட நஸ்லாவை அவர்கள் தமிழகத்தில் உள்ள ஏர்வாடி மன நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் அந்த காப்பகத்தில் தவித்த அவரை மன நலம் குன்றியதால் தான் சிகிச்சைக்கு கொண்டுவந்ததாக அங்குள்ள மருத்துவரிடம் தாயார் தெரிவித்ததுநஸ்லாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் விவேக் அளித்த ஆள்க்கொணர்வு மனுவை அடுத்து நஸ்லாவை அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வாழ்வதென்றால் அது தமது கணவருடன் மட்டுமே என நஸ்லா நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, திருமண ஆவணங்களையும் பரிசோதித்த நீதிமன்றம் நஸ்லாவை கணவர் விவேக்குடன் அனுப்பி வைத்தது. மனைவியை கடத்தி சென்றதாக விவேக் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நஸ்லாவின் தாயாரையும் உறவினரையும் பொலிசார் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

இருப்பினும் விவேக்குடன் நஸ்லாவை இனி ஒருபோதும் வாழ அனுமதிப்பதில்லை என நஸ்லாவின் தாயார் புஸ்ரா பீபி நீதிமன்ற வளாகத்தில் வைத்து சபதம் எடுத்துள்ளது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.