முல்லைத்தீவில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

253

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டதில் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தற்காலிக வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதோடு அன்றாடம் கூலிவேலை செய்து உழைப்பவர்களும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளனர். அத்தோடு கடற்தொழிலும் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளது.

பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பித நிலை அடைந்துள்ளதுடன் புனரமைப்பு செய்யப்படாத உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் குளங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் நந்நிக்கடல் மற்றும் நாயாறு கடல் ஏரிகள் பெருங்கடலை நோக்கி மிகவேகமாக நகர்கின்றது.

இடிமின்னல் தாக்கத்துடன் தொடரும் கடும் மழை காரணமாக தற்பொழுது சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.