வவுனியா நகரசபையின் எழுநீ விருதுகள் தொடர்பாக தமிழ் மாமன்றத்தின் நிலைப்பாடு தொடர்பான தெளிவுபடுத்தல்!!

671

 

வவுனியா நகரசபையின் “எழுநீ விருதுகள் 2018” தொடர்பான கருத்துக்களும், விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பில், ஒரு பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றமாகத் தமிழ் மாமன்றத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்றது.

1. விருது கொடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாகவும், அந்நபர்களைத் தெரிவு செய்தமை தொடர்பிலும் எந்தவொரு விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ நாம் முன்வைக்க விரும்பவில்லை. அது முற்றுமுழுதாக தெரிவுக்குழு மற்றும் நகரசபை நிர்வாகம் சார்ந்தது என்பதனை உணர்கின்றோம்.

2. ஆயினும் விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்த முறையில், விருதுக்குரியவர்களையோ அல்லது தேர்வுக்குழு மீதோ விமர்சனங்கள் வைக்கப்படுவது பொருத்தமற்றது என்பதாகவும், அவ்வாறு விமர்சனங்கள் ஏதுமிருப்பின், அவை தேர்வுக்குழுவைத் தெரிவு செய்த நகரசபை நிர்வாகத்தின் மீதே முன்வைக்கப்பட வேண்டும் என்பதாகவும் நாம் கருதுகின்றோம்.

3. ஆனாலும், குறித்த நிகழ்வு அதன் தன்மைக்கு மாறாக அரசியல் மயப்படுத்தப்படுவதனை அவதானித்து கவலையடைகின்றோம்.

4. நகரசபையின் “எழுநீ பண்பாட்டுக் குழு” வவுனியாவில் உள்ள கலை இலக்கிய மன்றங்களை இணைத்துப் பொதுக் கூட்டமொன்றிலிருந்தே அக்குழுவின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர், என்கின்ற கருத்துத் தொடர்பில் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுடையவர்கள் ஆகின்றோம்.

5. நகரசபைத் தலைவர் தனித்தனியே ஒவ்வொரு மன்றங்களையும் சந்திக்க விரும்பிய போது எமது மன்றத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நகரசபைத் தலைவரோடு சந்தித்திருந்த போதிலும், எமது மன்றத்தின் செயற்பாடுகளின் தொடர்ச்சியான முன்னெடுப்பிற்களுக்கான ஒரு சில காரணங்களினால் நகரசபையின் எழுநீ பண்பாட்டுக் குழுவின் தெரிவிற்கான அல்லது உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒரு மன்றமாக தமிழ் மாமன்றம் கலந்துகொள்ளவில்லை.

6. ஒரு சில பொது நிகழ்வுகளில் தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து கலந்து கொள்ள முற்பட்ட வேளைகளில், எமது படைப்புக்கள் சார்ந்த எல்லைப்படுத்தல்கள் மற்றும் தேவையற்ற தலையீடுகள் காரணமாக மன்ற நிகழ்வுகள் தவிர்ந்த பொது நிகழ்வுகளிலும், வேறு மன்ற நிகழ்வுகளிலும் தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றோம்.

7. ஆனாலும், எமது உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில், தமிழ் மாமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத வகையில் பொது நிகழ்வுகளில் அல்லது வேறு மன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை நாம் மதிக்கின்ற அதேவேளை, அதை அவர்களுடைய உரிமையாகக் கருதுகின்றோம்.

8. எனவே, எழுநீ பண்பாட்டு விழாவிலிருந்து தமிழ் மாமன்றம் அமைப்புச் சார்ந்து நடுநிலையோடு ஒதுங்கியிருக்கின்றது என்பதையும், எமது மன்ற உறுப்பினர்கள் யாராவது பங்கேற்பின் அது அவர்களது தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் சுய பங்கேற்பாகவே அமையும் என்பதையும், அவ் உறுப்பினர்களின் பங்கேற்பு தமிழ் மாமன்றத்தின் மன்றம் சார்ந்த பங்களிப்பாக அமையாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.

நன்றி
தமிழ் மாமன்றம்