வவுனியாவில் ஆவா குழு? முச்சக்கரவண்டியில் ஆயுதங்களுடன் தப்பித்து சென்ற நபர் மடக்கிப் பிடிப்பு!!

661

வவுனியா குருமன்காட்டுப் பகுதியில் முச்சக்கரவண்டியில் பல ஆயதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு (23.11.2018) 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

வவுனியா குருமன்காட்டுப் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஒர் முச்சக்கரவண்டி அதிவேகமாக பயணித்துள்ளது. போக்குவரத்துப் பொலிஸார் முச்சக்கரவண்டியினை நிறுத்திய போதும் நிற்காமல் சென்றுள்ளது.

முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற பொலிஸார் வவுனியா நகரப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியினை மடக்கிப் பிடித்து முச்சக்கரவண்டியினை சோதனைக்குட்படுத்தினார்கள்.

இதன் போது பாரிய கத்தி, கோடாரி, பைப் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டியின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் எதற்காக இவ்வாறான பொருட்கள் மற்றும் குறித்த நபருக்கும் ஆவா குழுவிற்கும் எவ்வித தொடர்புகள் உள்ளதா? இரவு நேரத்தில் இவ்வாறான பொருட்களுடன் பொலிஸார் நிறுத்துமாறு தெரிவித்த போதிலும் எதற்காக அதிவேகமாக பயணித்தார் என்ற பல்வேறு கேள்விகளுடன் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.