வவுனியாவில் அரசியல் நெருக்கடி தொடர்பாக விளக்கமளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம்!!

677

 

ஜனநாயகத்தை பாதுகாக்க சூழ்ச்சிகளை முறியடிப்போம்

வவுனியாவில் ‘ஜனநாயகத்தை பாதுகாக்க சூழ்ச்சிகளை முறியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டம் ஒன்று இன்று (24.11) நடைபெற்றது.

வவுனியா நெடுங்குளத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் தொடர்பாக மக்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கும் கருத்தரங்கு நிகழ்வாக இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் அரசியலில் ஏற்பட்ட சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாவட்ட முகாமையாளரும் சட்டத்தரணியுமான சஜீவ குணரத்தின விளக்கமளித்திருந்தார்.

நிகழ்வின் இறுதியில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச, வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துமாறு வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

எமது ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட தமிழ் பிரிவின் அமைப்பாளர் கே.கே.சந்திரகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.எம்.சிவலிங்கம், ஐக்கிய தேசியக்கட்சியானது தங்கள் ஆதரவுக் கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தல் ஒன்றை சந்தித்து வெற்றிபெறும் என தெரிவித்தார்.