மெய்சிலிர்க்க வைக்கும் இலங்கை அகதிகளின் மனிதநேயம் : குவியும் பாராட்டுக்கள்!!

438

தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை உதவிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதி மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் 450 இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . கஜா புயலின் கொடூர தாக்குதலுக்கு இவர்களின் வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாம் மூலம் தார்ப்பாய், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளனர். அதே நேரத்தில், அந்த பகுதி கிராம மக்களுக்கு அரசின் சார்பில் எந்த வித நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை.

இதை அறிந்த இலங்கை அகதிகள் ஒன்றிணைந்து, தங்களுக்குக் கிடைத்த அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அருகே இருந்த கிராம மக்களுக்குக் கொடுத்தனர். இவர்களின் மனித நேயத்தைக் கண்டு கிராம மக்கள் பூரிப்படைந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.