வவுனியாவில் இன்றுமுதல் விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

994

 

விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை

வவுனியா நகரசபையினால் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளதாக நகர உப பிதா சு.குமாரசுவாமி தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை வேலைப்பகுதி, சுகாதாரப்பகுதி ஊழியர்களின் மாதாந்தக்கூட்டம் நகர உப பிதா தலைமையில் இடம்பெற்றபோது அதில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா நகரசபையினால் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள், தெருக்களிலுள்ள ஏனைய குப்பைகள் அகற்றும் நடவடிக்கை ஒன்று விஷேடமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏனைய கிழமை நாட்களில் வழமையான அன்றாட குப்பை அகற்றும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்களினால் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாறு விஷேடமாக ஒவ்வொரு பகுதிகளைத் தெரிவு செய்து அங்கிருக்கும் ஏனைய குப்பைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதற்கென நீளமான உழவு இயந்திரப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இன்றைய தினம் வைரவப்புளியங்குளம் பகுதியில் இவ்விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது. எனவே பொதுமக்கள் தமது அன்றாட குப்பைகளை விட்டு ஏனைய குப்பைகளை குப்பை அகற்ற வரும் ஊழியர்களிடம் வழங்கி நகரசபை ஊழியர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.