சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, மொனராலையில் தனது காதலனால் பெண்ணொருவர்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
ஆரம்பத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் கூறிய கருத்துக்கும், கொலை செய்ததாக கூறப்படும் இளைஞனின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த 22 வயதான பெண் திருமணமானவர் என சந்தேகநபரான இளைஞன் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் திருமணமான கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடமாக இளைஞருடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் குறித்த இளைஞனின் சகோதரியின் அழகுக்கலை நிலையத்தில் வேலை செய்துள்ளார். அந்த சேவை நிலையத்திற்கு வந்த பின்னரே இருவருக்கும் இடையில் தொடர்புகள் ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் அந்த பெண் வேறு நபர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தான் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள இளைஞன், கொழும்பில் பணியாற்றிவிட்டு மொனராகலைக்கு வந்தபோது பெண்ணிடம் பேசுவதற்காக அவருடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சுமேத வாவிக்கு அருகில் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை இதன்போது குறித்தபெண் மறுத்ததாகவும் அவரது மோட்டார் சைக்கிளை பரிசோதனை செய்ய சென்றபோது அதற்கு குறித்த பெண் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பலாத்காரமாக பரிசோதனை செய்தபோது அதில் இருந்த இரண்டு தொலைபேசிகளை கண்டு பிடித்ததாகவும் அதுதொடர்பாக கடுமையான வாக்கு வாதம் இருவருக்குமிடையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாக்குவாதம் தொடர்ந்ததில் அப்பெண்ணை தான் கழுத்து நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் குறித்த இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 23ம் திகதி இந்த கொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் 25ம் திகதி கைது செய்து நீதிமன்றத்தின் முன்னலைப்படுத்தியிருந்தனர்.
குறித்த கொலைச்சம்பவத்தை மற்றமொரு குழுவினர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





