இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும் விபத்தில் பலியான சோகம்!!

331

 

விபத்தில் பலியான சோகம்

தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கும் இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்ல மனைவி ராதா(45) மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் பின் ஆம்புலன்சில் பாபுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரின் மனைவி ராதா, மகன் அம்பரீஷ்(22), தாய் தங்கம்(70) மகள் சோனியா(25) ஆகியோர் மற்றொரு காரில் ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றனர்.

கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எடைக்கல் எனுமிடத்தில் செல்லும்போது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதா, அம்பரீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அவரது தாய் தங்கம், மகள் சோனியா, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோகுல், லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் சந்திரபாபு ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொலிசார். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் விபத்தில் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.