வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (29.11.2018) காலை 9.30 மணியளவில் புலமை செல்வங்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.பாலச்சந்திரன் தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் கருணாதாச, கௌரவ விருந்தினராக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லோரா ஆராச்சி , பிரதேச வனவள அதிகாரி நாணயக்கார , முயற்சி அறக்கட்டளை தலைவர் சந்திரகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஸ்ரீநிவாசன், சிறப்பு விருந்தினர்களாக கிராம சேவையாளர் ஸ்ரீதரன் , சமூக சேவகர் குருசாமி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம, கௌரவ , சிறப்பு விருந்தினர்கள் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு செய்தனர்.
மேலும் மாணவர்கள் சித்தியடைய ஊன்றுகோளாகவிருந்த ஆசிரியர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோரினாலும் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் பாடசாலையின் பழைய மாணவர் இருவர் இணைந்து வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இக் கௌரவிப்பு நிகழ்விற்கு முயற்சி அறக்கட்டளை பூரண அனுசரணை வழங்கியதுடன், நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்களுக்கும் மரங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




































