சைக்கோ கொலையாளி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய நபர் சைக்கோ கொலையாளியா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர்ராஜ் என்பவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 28 தேதி இவர் பணியில் இருந்த போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கும் இங்கும் ஓடித் திரிந்த அவர், திடீரென தேவாலயம் முன் நடனமாடினார்.
இதைப் பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், மர்மநபரை எச்சரித்துள்ளார். காவலாளியை நோக்கிச் சென்ற அந்த நபர், திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் பெரிய கல்லைத் தூக்கி சுந்தர்ராஜின் வயிற்றில் போட்டார்.
மார்பு மற்றும் தலையிலும் கல்லைத் தூக்கிப் போட்ட மர்மநபர், நிர்வாணமாக நடனமாடிவிட்டு, காவலாளியை தாக்கிய கல்லை தேவாலயம் முன் சிறிது நேரம் வைத்த அவர், புதருக்குள் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தர்ராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அந்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.