முச்சக்கரவண்டி தீப்பற்றிக் கொண்டதால் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் திருகோணமலை – மகாதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் அதே இடத்தை சேர்ந்த எஸ்.எஸ்.கே.அபேரத்ன (47வயது) என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேக்கரி வியாபாரம் செய்து வரும் குறித்த நபர் கடைகளுக்கு பொருட்களை கொடுத்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, இதனை அடுத்து வண்டியின் கதவை திறந்து பார்த்த போது தீ பற்றிக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
மேலும் தீயை அணைப்பதற்கு முற்பட்ட வேளை குறித்த நபரின் கையில் தீ பற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி தீப்பற்றிய போது வீதியின் அருகில் இருந்ததாகவும், சாரதி மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








