வவுனியா மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்று(02.12) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது. இதனால் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் 17, 19 மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





