வடக்கின் பாரிய குளமான இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 35 அடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாணத்தின் விவசாயத்திற்கு பெரும் பங்காற்றும் முக்கிய குளமான இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் 2300 மில்லியன் ரூபா செலவில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பின் மூலம் வடமாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டது.
புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து குளத்தில் தற்போது 36 அடி வரையில் நீர் சேமிக்கக்கூடிய ஏது நிலைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 35 அடிவரை உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இரணைமடு குளத்தினை வட மாகாணசபையின் முன்னாள் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
குளத்தில் 36 அடி வரை நீர் வந்த பின்னரே இரணைமடு குளத்தின் வான் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 35 அடி நீர் இரணைமடு குளத்தில் காணப்படுகின்றது.







