வவுனியா பழைய பேருந்து நிலையம் மீள்திறப்பு ஒருவருட முயற்சிக்கு கிடைத்த வெற்றி : வர்த்தகர் சங்கத்தலைவர் சுஜன்!!

1040

 

வவுனியா பழைய பேருந்து நிலையம் இன்று கடந்த ஒரு வருடங்களின் பின்னர் மீளத்திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைவரின் முயற்சிகளினாலும் இந்தச் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. கடந்த ஒருவருடமாக எம்மால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிக்கு கிடைத்த வெற்றியையே இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

இவ்வாறு இன்று காலை பழைய பேருந்து நிலையம் மீள் திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் ச.சுஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, இன்று எம்மத்தியிலுள்ள அனைவரின் கடும் முயற்சிகளால் பழைய பேருந்து நிலையம் மீளத்திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னின்று பணியாற்றிய அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த ஒருவருடமாக பேருந்து நிலைய மாற்றத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. இவ்வேளையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை நாம் நினைவுகூருவதுடன் தொடர்ந்தும் எமக்கு அனைவரினதும் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.

வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வவுனியா நகர பிதா இ.கௌதமனால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஜ.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் ரி. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோன்,

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் திலீபன், நகரசபை உப நகர பிதா, நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், முச்சக்வரண்டி உரிமையாளர் சங்கத்தலைவர், வர்த்தக உறுப்பினர்கள், சங்கப்பிரமுகர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.