அலறியபடி ஓடிய சிறுவன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன ஓட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய மனைவி சீமா (30) மற்றும் 11 வயது மகனுடன் மலைப்பகுதிகளை சுற்றிபார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார்.
மகன் தூங்கிய சிறிது நேரத்திலேயே கணவன் – மனைவிக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்டு மகனும் விழித்துள்ளான். அப்போது கையில் ஒரு கத்தியை கொண்டு சீமாவின் வயிற்றுப்பகுதியில் ஷிண்டே சரமாரியாக குத்தியுள்ளார்.
வேண்டாம் என சிறுவன் கத்தியும், அடுத்த நிமிடமே கழுத்தை அறுத்துக்கொண்டு ஷிண்டேவும் தற்கொலை செய்துகொண்டு தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியில், சிறுவன் அங்கிருந்து அலறியபடியே ஹோட்டலின் வரவேற்பு பகுதிக்கு சென்று மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
பின்னர் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.