பிரபல நடிகர் கலாபவன் மணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட் பற்றி விசாரித்தனர்.
இதனால் கோபம் அடைந்த கலாபவன் மணி பிரேஸ்லெட்டை கழற்றி கவுண்ட்டரில் வீசிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் கலாபவன் மணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் சுங்க இலாகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்த கலாபவன் மணி சமீப காலமாகவே போலீசாரும் சுங்க இலாகாவினரும் தன்னை வேண்டும் என்றே துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். பிரேஸ்லெட் குறித்து என்னிடம் கேட்டனர். பல ஆண்டுகளாக அதை அணிந்திருப்பதாக பதில் அளித்தேன். அவர்களிடம் முரட்டுத்தனமாக நான் பேசவில்லை. கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்தால் அதுபற்றி தெளிவாக தெரியும் என்றும் மணி கூறினார்.
பிரேஸ்லெட் குறித்து விளக்கம் அளிக்கும்படி நடிகர் மணிக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என்று, சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் அவருடைய காரை சோதனை போட்டபோதும் நடிகர் கலாபவன் மணி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.