தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை, கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2வது திருமணம்!!

655

 

கெளசல்யா 2வது திருமணம்

தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2016 மார்ச் 13ம் திகதியன்றூ, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தமிழகத்தில் இருக்கும் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. சங்கரின் கொலைக்குப் பின்னர் சாதி ஒழிப்புப் போராளியாக கெளசல்யா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்தவர். சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. கெளசல்யா நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார்.

இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.