இளைஞனை பலியெடுத்த இரணைமடு குளம்!!

1064

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

இன்று மாலை 4.30 மணியளவில் இரணைமடு குளத்தின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்ன. இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.

இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக்கொடிண்டிருந்தனர்.

இதன் போது யாழ். சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும், பொலிஸ் மற்றும் படையினர் 30 நிமிடங்களின் பின்னரே சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஒரு பகுதியில் திறக்கப்பட்டிருந்த வான்கதவுகள் மூடப்பட்டு சில இளைஞர்கள் நீரில் இறங்கி தேடுதலை மேற்கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் உடலை மீட்டனர்.

இதேவேளை, இரணைமடுகுளம் அபிவிருத்திக்கு பின் கடந்த வெள்ளிகிழமை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.