வவுனியா இ.போ.சபை நேர அட்டவணைக்கு ஏற்ப வராமையால் பழைய பேரூந்து நிலையத்திற்கு செல்ல முடியவில்லை : தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர்!!

633

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பழைய பேரூந்து நிலையத்திற்கு நேர அட்டவணைக்கு ஏற்ப வந்து செல்லாமையால் சீரான சேவையை வழங்க முடியாதுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் இ.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து 3 நிமிடம் தரித்து செல்ல எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த சனிக்கிழமை பழைய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும் முன்னர் இடம்பெற்றதைப் போன்று வெளிமாவட்ட பேருந்துகள் பயணிகளை பழைய பேரூந்து நிலையத்தில் இறக்கி, ஏற்றுகிற போதும் உள்ளூர் சேவைகள் வரவில்லை. இது குறித்து கேட்ட போதே மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பழைய பேரூந்து நிலையத்திற்கு நேர அட்டவணைக்கு ஏற்ப இ.போ.சபை பேருந்துகள் வந்து செல்லவில்லை. அத்துடன் பழைய பேரூந்து நிலையத்தில் நேரக்கணிப்பாளர்களும் கடமையில் நிறுத்தப்படவில்லை. இதன்காரணமாகவே தனியார் பேருந்துகள் சீராக பழைய பேரூந்து நிலையத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.