யாழில் மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுழிபுரம், விக்ரோரியா கல்லூரியில் தரம் 09இல் கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும் கடந்த 11ஆம் திகதி இரவு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது, மாணவன் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்னவென கண்டறியப்படவில்லை.
அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே மேலதிக விபரம் தெரியும் என தெரிவித்துள்ளார்.





