பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை சிகை அலங்காரம் எம்மால் தடை செய்யப்படுகிறது என 2019 ஆம் ஆண்டு வடமாகாண அழகர் சங்க சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி, கூட்டுறவு மண்டபத்தில் நேற்று இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அழகர் சங்கத்துடன் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தவிசாளர் சமூக கட்டுப்பாடு குறித்தும், மாணவர்களிடையே எழுந்து வருகின்ற முடி திருத்துதல் தன்மையையும் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய தேவையும் பற்றி உரையாற்றினார்.
அதுமட்டுமன்றி புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் உங்கள் முகத்தை அவலட்சணமாக்கும் என்ற தொனிப்பொருளில் தங்களுடைய அழகுக்கலைகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சபையினால் மேற்கொள்ளப்பட்ட பிரேரணை தொடர்பாக அழகர்கள் சங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை சிகை அலங்காரத்தினை தடுக்குமாறு கரைச்சி பிரதேச சபையின் ஜந்தாவது சபை (2018.07.10) அன்றைய தினம் அமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
அமர்வில் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் சாத்தியனாந்தினால் பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை சீர்ப்படுத்தத்தக்க வகையில் மாணவர்களின் சிகையலங்காரத்தினை உரிய கட்டொழுங்கில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக முடி திருத்தும் நிலையங்களை அறிவுறுத்தி முகாமைப்படுத்தல் என்ற பிரேரணைக்கு அமைவாக சபையிலே நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டு இச் சபை தீர்மானம் கொண்டு வரப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அழகர் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது.








