தமிழில் புதிய முயற்சி என பலராலும் பாராட்டை பெற்ற ஆரோகணம் படத்தை தயாரித்த ஏ.வி.ஏ.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் மீண்டும் பெரும் பொருட்செலவில், அலையன்ஸ் பிக்சர்ஸ், புரொடக்ஷன் கிருஷ்ணா பலராம ராஜா ஆகியோரின் நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கிற புதிய படம் என்ன சத்தம் இந்த நேரம்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ். பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் குரு ரமேஷிடம் கேட்டபோது கதைப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை தேடி வந்தோம். 6 மாதங்கள் தேடியதன் பலனாக ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் சென்னையிலேயே வசிக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறோம்.
உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதில்லை. இந்த பெருமையை இந்த படம்தான் பெற்றிருக்கிறது. இந்தியாவில் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இந்திய சினிமாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே படம் என்ன சத்தம் இந்த நேரம் தான் என்று அவர் கூறினார்.
இப்படத்தில் நிதின் சத்யா முக்கிய கரக்டரில் நடித்திருக்கிறார். மாளவிகா வேல்ஸ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சிங்கப்பூரை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் புரவலன் தமிழில் அறிமுகம் ஆகிறார். மனோபாலா, சிவசங்கர் மாஸ்டர், சுவாமிநாதன், வையாபுரி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
சென்னை ஐதராபாத் போன்ற இடங்களில் சுமார் 41 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார்கள். நாகா என்பவர் இசையமைக்கிறார். ஜான் வசனம் எழுத சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.





