நவீன சரஸ்வதி சபதத்திற்கு எதிராக போர்க் கொடி!!

589

NSSநவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் இந்து மதம் குறித்து அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அதை நீக்கக் கோரியும், அந்தப் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாரத் மக்கள் கட்சி என்ற அமைப்பினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாட்டு மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது..

நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகிய இந்து கடவுள்களை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் பல காட்சிகள் உள்ளன.

இந்தக் காட்சியைப் பார்க்கும் இந்துக்களின் மனது புண்படுகிறது. இதுபோன்ற காட்சிகளுக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதியளித்தது கண்டிக்கதக்கதாகும். எனவே அந்தப் படத்தில் இருக்கும் இந்து மதம் குறித்து அவதூறான காட்சிகளை நீக்க வேண்டும்.

இதற்குக் காரணமான திரைப்படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பாரத் மக்கள் கட்சியினர் கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவத்திடம் அளித்தனர்.