வவுனியாவில் அரச தொழில் பெற்றுதருவதாக 27 இலட்சம் பணமோசடி : நபர் ஒருவர் கைது!!

895

வவுனியாவில் பல நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி அரச தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் மாவட்ட செலயகத்தின் புனர்வாழ்வு அமைச்சின் தொடர்புடன் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா உக்குளாங்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவருடன் நெருங்கிப் பழகி அவர் ஊடாக அவரின் கணவருக்கு வேலை இல்லை எனவே அவருக்கு புனர்வாழ்வு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாகவும் பலருக்கு அரச தொழில் வாய்ப்பு வெற்றிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் தன்னை மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றும் உத்தியோகத்தர் என்று அறிமுகம் செய்து நீண்டகாலமாக பழகி வந்துள்ளதுடன் தாதிய உத்தியோகத்தரின் கணவருக்கு தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள்கள் அரச சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்து தாதிய உத்தியோகத்தரிடமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து தாதிய உத்தியோகத்தரும் தனக்கு நெருக்கமானவர்களிடம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனால் பலரிடமிருந்து அரச தொழில் பெற்றுக்கொள்வதற்கும் அரச சலுகையில் மோட்டார் சைக்கில் பெற்றுக்கொள்வதற்கும் பாரிய நிதிகள் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளும்போது மாவட்ட செயலகத்தில் வேலையிலிருப்பதாகவும் வெளியே வருகின்றேன் பணத்தினைத் தருமாறு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் வாசலில் வைத்து பலரிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே குறித்த தாதிய உத்தியோகத்தரின் பாவனையற்ற வங்கிக்கணக்கின் புத்தம் குறித்த நபரினால் திருடப்பட்டு அந்த வங்கியின் இலக்கத்திற்கு பணம் அனைத்தும் வைப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தாதிய உத்தியோகத்தருக்கு நீண்டகாலமாக தெரியவரவில்லை குறித்த தாதிய உத்தியோகத்தரை தனது சொந்த சகோதரி என்று தெரிவித்து அவரின் வங்கிக்கணக்கிற்கு பண வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த தாதிய உத்தியோகத்தர் தனது பாவனையற்ற தனியார் வங்கிப் புத்தகம் உட்பட பணம் பெற்றுக்கொள்ளும் அட்டை என்பன தவறிவிட்டுள்ளதாக நேற்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் செயற்படும் விஷேட குற்றப்பிரிவின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தனியார் வங்கி கணக்கிற்கு 6 தொடக்கம் 7 இலட்சம் ரூபா வரையில் வைப்பிட்டு பணம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைவிட தனி நபர்களிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாக 20இலட்சத்திற்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

சிலருக்கு மோட்டார் சைக்கிளின் மாதிரி சாவியை வழங்கிவிட்டு இது உங்களுக்கான மோட்டார் சைக்கிளின் சாவி வைத்திருக்கவும் மோட்டார் சைக்கிள் வந்ததும் பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மாலை குறித்த பண மோசடியில் ஈடுபட்டுள்ள உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாக தெரிவித்து பெருந்தொகை பணமோசடி இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பலரிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகவும் அரச சலுகையில் மோட்டார் சைக்கிள் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து சுமார் 27 இலட்சம் ரூபாவினை பல வழிகளிலிருந்து பொதுமக்களிடம் வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இன்னும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கலாம் என்று பொலிசார் எதிர்பார்க்கின்றனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.