மனைவி என்னை கண்டுகொள்ளவேயில்லை : மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

434

 

விபரீத முடிவு

தமிழகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கும் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்த ஆனந்தி, தன் தாய் வீடு இருக்கும் சீதபற்பநல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளார்.

குழந்தையைப் பார்க்க வந்த இசக்கிமுத்து குழந்தையுடன் ஆனந்தியையும் தன்னுடன் அய்யனார்குளம் வருமாறு அழைத்துள்ளார். இசக்கிமுத்து மதுபோதையில் இருந்ததால் அவருடன் மகளையும் குழந்தையையும் அனுப்ப மாமியார் மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 12-ம் திகதி இசக்கிமுத்து மனைவியைப் பார்க்க சீதபற்பநல்லூர் வந்துள்ளார். அப்போதும் அவருடன் வர ஆனந்தி மறுத்துவிட்டதால், மதுபோதையில் இருந்த இசக்கிமுத்து அங்கேயே தங்கிவிட்டார்.

மறுநாள் கண்விழித்துப் பார்த்தபோது, குழந்தையையும் இசக்கிமுத்துவையும் காணவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தி பொலிசில் புகார் செய்தார்.

பொலிசார் இசக்கிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் ஆத்திரத்தில் பிறந்து 22 நாள்களே ஆகியிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இசக்கிமுத்துவைச் சந்திக்கவோ அவருக்கு சட்டரீதியாக உதவி செய்யவோ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அத்துடன், மனைவியும் அவரைச் கண்டுகொள்ளவில்லை.

தான் செய்தது தவறு தான் என்றாலும் யாருமே தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தது இசக்கிமுத்துவை மிகுந்த மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று அவர் திடீரென சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இசக்கிமுத்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.