2 மணிநேரத்திலேயே கட்டிய தாலியை கழற்றிய கணவர் : கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி மனைவி போராட்டம்!!

357

 

மனைவி போராட்டம்

விருத்தாசலம் மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் காதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டதால் அவருடன் சேர்த்து வைக்ககோரி காதல் மனைவி போராட்டம் நடத்தியுள்ளார். சிலம்பொலி மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 12ம் தேதி, முதனை செம்பையனார் கோவிலில் இருவரின் வீட்டிற்கும் தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. சிலம்பொலியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்த செல்லதுரை, அதன்பின் பேசுவதை தவிர்த்துள்ளார்.

சிலம்பொலி, தனது உறவினர்களுடன் சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள செல்லதுரை வீட்டிற்கு நேற்று காலை நியாயம் கேட்க வந்தார். அப்போது, அவரது வீடு பூட்டியிருந்ததால், காதல் கணவருடன் சேர்த்து வைக்கும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி, தனது திருமண புகைப்படத்துடன் வீட்டின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சிலம்பொலி கூறுகையில், ஐந்து ஆண்டுகளாக காதலித்து, 12ம் தேதி முதனை செம்பையனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அவரது அம்மா, விஷம் குடித்துவிட்டதாக தகவல் தெரிய வந்ததால், திருமணமான 2 மணி நேரத்திலேயே தாலியை கழற்றிய கணவர், இரண்டு நாட்களில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றார்.

ஆனால், அதன்பின் பேசுவதை தவிர்த்ததால், மகளிர் பொலிசில் புகார் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால், கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, வந்து விட்டேன் என கூறியுள்ளார். மகளிர் பொலிசார், சிலம்பொலியை சமாதானப்படுத்தி காதல் கணவருடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.