இன்று பிற்பகல்(27.12) 1.30 மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில் அதனை முந்திச் செல்ல முற்பட்ட கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இரண்டு டிப்பர் வாகன சாரதிகளும் வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் பெட்டி சேதமடைந்துள்ளது. மேலும் தரிப்பிடத்தில் நின்ற தனியார் பேரூந்தும் சேதமடைந்துள்ளது.
இதனால் சில நிமிடங்கள் ஏ9 போக்குவரத்து தடைப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.









