சுட்டுக்கொலை
நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்களுடன் சேர்ந்து இந்த வருடத்தின் இதுவரையில், துப்பாக்கி சூட்டுக்களினால் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 49 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிராண்பாஸ் – ஹேனமுல்லை வீட்டுத்தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ல் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒருவரான புளுமெண்டல் சங்க என்பரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தங்காலை – குடாவெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடை சோதனையில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்ந்து மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த வீதித் தடை ஊடாக பயணித்த சிற்றூர்ந்தை நிறுத்துமாறு காவல்துறையினர் சமிக்சை எழுப்பியுள்ளனர்.
எனினும், குறித்த சிற்றூர்ந்து காவல்துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, தப்பித்துச் செல்ல முயற்சித்தபோது, ஒரு காவல்துறை அலுவலரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குறித்த சிற்றூர்ந்து நிறுத்தப்படாமல் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிற்றூர்ந்தின் உரிமையாளரைக் கைதுசெய்வதற்காக தங்காலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, தங்காலை – குடாவெல்ல மீன்ப்பிடி துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய பல முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக தங்காலை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அடுத்தக்கட்ட விசாரணை நடவடிக்கைகள் காரணமாக குறித்த தகவல்களின் இரகசியத்தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று காலை 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










