வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனைவருக்கும் கல்வி செயற்றிட்டம்!!

636

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் முதன் முறையாக கல்விக்கு முன்மாதிரியான செயற்திட்டம் இன்று (27.12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.சுஜன் தலைமையில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள 216 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி அனைவருக்கும் கல்வி செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களான செட்டிகுளம், நெடுங்கேணி, புளியங்குளம், சிதம்பரபுரம் போன்ற வசதியற்ற கிராமப்புறங்களிலுள்ள வசதியற்ற மாணவர்களின் விபரங்கள் மாவட்ட செயலகத்திலிருந்து பெறப்பட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் கற்றல் நிலைமைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு 216 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா சு.குமாரசாமி, வவுனியா சிறுவர்களின் நிலை தலைவர், வவுனியா மாவட்ட சிறுவர் சபை செல்வி சசிராஜ் அக்சயா,

வர்த்தகர் சங்கப் போசகரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன், மாவட்ட செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி, வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.