வவுனியாவில் மக்களை ஏமாற்றி வீதியில் யாசகம் செய்த பெண் பிடிபட்டார்!!

727

வவுனியா, மன்னார் வீதியில் மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் சென்றவர்களிடம் யாசகம் செய்த பெண் ஒருவர் ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் இருந்து பெண் ஒருவர் நடக்க முடியாதவராகவும், வாய் பேச முயாதவராகவும் தன்னை உருமாற்றம் செய்து வீதியில் இருந்து நகர்ந்துகொண்டு யாசகம் செய்துள்ளார்.

இதனை அவதானித்த பலரது மனம் நெகிழ்ந்துள்ளதுடன், குறித்த பெண் மீது இரக்கப்பட்டு உதவியாக சிறு தொகை பணங்களை வழங்கியதுடன், வாகனங்களில் சென்றோரும், வாகனங்களை நிறுத்தி பணம் வழங்கினர்.

குறித்த பெண் வீதியில் நகர்ந்து கொண்டு சென்றதாலும், வாகனங்கள் குறித்த பெண் மீது இரக்கம் கொண்டு திடீரென நிறுத்தி உதவிகள் வழங்கியதாலும், விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை உருவாக்கியிருந்தது.

குறித்த பெண் அவ்வாறு நகர்ந்துகொண்டு சுமார் 2 கிலோமீற்றர் தூரம் சென்று குருமன்காடு சந்தியை அடைந்தபோது பெண்ணின் அவலநிலை கண்டும், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை அவதானித்தும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களான கே.வசந்தரூபன் மற்றும் பா.சதீஸன் ஆகியோர் குறித்த பெண்ணுடன் சைகையில் உரையாடி அப் பெண்ணின் நிலை குறித்து மாவட்ட சமூக சேவை திணைக்களத்திற்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் ஆகியோர் குறித்த பெண்ணுக்கு சக்கர நாற்காலியை வழங்கினர். ஆனால் குறித்த பெண் தனக்கு அது வேண்டாம் எனவும், காசு தான் வேண்டும் எனவும் அடம் பிடித்ததுடன், அவ்வாறு நகர்ந்து செல்லவே முயன்றார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சமூக சேவைத் திணக்கள உத்தியோகத்தர்களும், ஊடகவியாளர்களும் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், வீதியால் சென்ற சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றில் குறித்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலைக்கு சென்ற அவர்கள் குறித்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததையடுத்து அந்தப் பெண் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

தான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும், யாசகம் செய்வதற்காக பஸ்சில் வவுனியா வந்ததாகவும் தெரிவித்துடன், ஒரு காலில் பிறப்பில் இருந்து சிறு குறைப்பாடு உள்ள போதும் நடக்கக்கூடியவர் எனவும் வாய்பேசுபவர் எனவும் தெரிவித்தார்.

தனது கணவர் கடல் தொழில் செய்பவர். அவர் இறந்து 6 வருடங்கள் சென்று விட்டது எனவும், தனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை திருமணம் செய்து விட்டார். ஏனைய பிள்ளைகளுக்காகவே தான் உருமாற்றம் செய்து இயலாதவர் போல் நடித்து யாசகம் செய்வதாகவும் கூறிய பெண் தான் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் எனத் தெவித்திருந்தார்.

இதன்போது குறித்த பெண் வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கிய சமூக சேவைத் திணைக்களமும், ஊடகவியலாளர்களும் குறித்த பெண்ணை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தனர்.