வவுனியாவில் மழை காரணமாக மூவாயிரத்து 588 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

393

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக மூவாயிரத்து 588.75 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளது என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 48 ஆயிரத்து 902 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த நிலையில் தற்போது 48 ஆயிரத்து 914 ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நீர்ப்பாசனத்திற்கு உட்பட்ட குளங்களில் ஆறாயிரத்து 529 ஏக்கர் நிலப்பரப்பிலும், மாகாண நீர்பாசன திணைக்களத்தின் கீழான நடுத்தர குளங்களின் கீழ் ஐயாயிரத்து 585 ஏக்கரும்,

எமது திணைக்களத்திற்கு உட்பட்ட 661 குளங்களில் 29 ஆயிரத்து 800 ஏக்கரும், மானாவாரி அடிப்படையில் 7 ஆயிரம் ஏக்கரும் என மொத்தமாக 47 ஆயிரத்து 914 ஏக்கர் நெற்பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 29 ஆயிரத்து 895 ஏக்கருக்கு விவசாயிகள் உரமானியத்தைப் பெற்றுள்ளார்கள்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 3588.75 ஏக்கர் அழிவடைந்துள்ளது. இதில் 90 வீதமான காணிகள் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அழிவடைந்துள்ளது. அதேபோன்று யானையினால் 17 ஏக்கர் அழிவுக்கு உட்பட்டுள்ளது. உழுந்து பயிர்செய்கையில் 150 ஏக்கர் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.