புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக இறந்த காதலி!!

373

 

பரிதாபமாக இறந்த காதலி

தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அடுத்திருக்கும் வெண்ண முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பார்த்திபன். 24 வயதான இவர், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.

இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சங்கிலிமுத்து என்பவரின் மகள் அனுப்பிரியாவை கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் வீட்டிற்கும் தெரியவந்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனுப்பிரியவை தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வேம்படியில் இருக்கும் அவரின் அக்கா வீட்டில் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் திகதி பார்த்திபன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வேம்படியில் தங்கியிருந்த அனுப்பிரியாவை சந்திக்கச் சென்றதாகவும், அப்போது அனுப்பிரியாவையும்- பார்த்திபனையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட அனுப்பிரியாவின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து அப்பகுதியில் உள்ள கோவிலில் நடத்தி வைத்தனர்.

மகனுக்கு திருமணம் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபனின் தாயார் கவிதா, தன் உறவினர்களுடன் அங்கு சென்ற போது, பார்த்திபனும், அனுப்பிரியாவும் திருமண கோலத்தில் இருந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றாலும் இருவரையும் ஏற்க மறுத்த அவரது உறவினர்கள், அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், பார்த்திபனின் தாயார் அழைத்தபோது அனுப்பிரியாவின் பெற்றோர் அனுப்பி வைக்க மறுத்ததோடு, நாளை அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் மறுநாள் காலை பார்த்திபனுக்கு போன் செய்த அவரின் தாயார் கவிதா, தான் விஷம் குடித்துவிட்டதாகவும், புது மனைவியோடு சந்தோஷமாக இரு என்று கூறி போனை கட் செய்துள்ளார்.

இதை கேட்டு மனமுடைந்த பார்த்திபன், தன்னால் தாய் விஷம் குடித்துவிட்டதை நினைத்து மனமுடைந்துள்ளார் அதன் பின் திருமணம் நடைபெற்ற கோவில் அருகே பார்த்திபன் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூச்சிகொல்லி மருந்தை குடித்திருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்த்திபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தனது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு பார்த்திபன், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் விஷம் குடித்துவிட்டதாக கூறிய பார்த்திபனின் தாயார் கவிதா, மகன் பார்த்திபன் சாவில் மர்மம் உள்ளதாகவும் தன் மகனைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திக் கொன்றுவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் காதல் கணவர் பார்த்திபனுடன் திருமணம் நடந்தாலும், ஒருநாள்கூட வாழாத நிலையில் பார்த்திபன் தற்கொலை செய்துகொண்டதை எண்ணி, மனவேதனையில் இருந்த அவரின் மனைவி அனுப்பிரியா தனது சொந்த ஊரான வெண்ண முத்துப்பட்டிக்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த அனுப்பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஓட்டு வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்கு மாட்டித் தொங்கிய நிலையில், கையில் கணவர் பார்த்திபனின் புகைப்படத்தை பிடித்தபடி காணப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.