மகனை கொன்று எரித்த இளம்தாய்
சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும், சரவணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்தார்.
கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, தனது பிறந்த வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு மீனாட்சி செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதுபோல நேற்று முன் தினமும் கணவனுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்கு மீனாட்சி சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார். இன்று காலையில் மீனாட்சி மாயமான நிலையில், வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து உடல் எரிந்து போன துர்நாற்றம் வரவே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற பொலிசார் அந்த தொட்டியில் இருந்து எரிந்த நிலையில் மீனாட்சியின் மகன் ஜெயகாந்தன் உடலை மீட்டனர். இந்த நிலையில், மொட்டை அடித்த படி வீட்டிற்கு திடீரென வந்த மீனாட்சி தனது மகனைக் கொலை செய்தது தான் தான் என கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த ஜெயகாந்தனை கழுத்தை நெறித்து விட்டு கொன்று விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தொட்டியில் போட்டதாக மீனாட்சி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்த போது பயமாக இருந்ததால், தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று மீனாட்சி கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மகனைக் கொலை செய்து விட்டு, மாங்காடு சென்று கோவிலில் அவர் மொட்டை அடித்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். மீனாட்சியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.