இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன் (30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. அதாவது காவ்யா 17 வயது மைனராக இருக்கும் போது திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் தனது கணவர் சுருஜன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்த காவ்யா அதிர்ச்சியடைந்தார். இதன்பின்னர் சுருஜனும் அவர் குடும்பத்தாரும் காவ்யாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இந்நிலையில் காவ்யா மீது திருட்டுப்பட்டம் கட்டி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். பின்னர் பாட்டி வீட்டில் தங்கியிருந்த காவ்யாவுக்கு சமீபத்தில் 18 வயது ஆனது.
இதையடுத்து பெண்கள் அமைப்பு உதவியுடன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது காவ்யா பொலிஸ் புகார் அளித்துள்ளார். இது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.