மாடியிலிருந்து மனைவியை தூக்கி வீசிக் கொன்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

364

 

அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.

கட்டுமானப் பணியில், ஜார்க்கண்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார், பியூலாதேவி ஆகியோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அங்குள்ள கூடாரத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர். கடந்த 27-ந் திகதி 19-வது மாடியில் பணியில் இருந்த பியூலா தேவி, தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது இச்சம்பவத்தில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பியூலாதேவி கணவர் சந்தோஷ் குமாரைப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, 19-வது மாடியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பியூலாதேவியிடம், சந்தோஷ் குமார் வாக்குவாதம் செய்ததை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பியூலாதேவியை தலையில் அடித்து 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டார்.

கடந்த 3 மாதமாக அங்கு தங்கி இருக்கும் நிலையில், பியூலாதேவி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்களுடன் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. அப்படி பழகக் கூடாது என்று கணவர் எச்சரித்தும் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார் பியூலாதேவி.

சம்பவத்தன்றும் ஒருவரிடம் அவர் சிரித்து பேசியதால், தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள சந்தோஷ்குமார், அப்போது உண்டான ஆத்திரத்தில் மனைவியின் தலையில் தாக்கியதோடு, அவரை 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.