வவுனியாவைச் சேர்ந்த பெண் சவுதியில் தற்கொலை : 4 மாதங்களின் பின் இலங்கை வந்த உடல்!!

804

 

சவுதியில் தற்கொலை

சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற, வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் நான்கு மாதங்களின் முன்னர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், கடந்த சனிக்கிழமையே அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

கணவன் இறந்து விட்ட நிலையில், இந்த பெண்ணே குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். இவரது உயிரிழப்பிற்கு கொழும்பிலுள்ள, முகவரே காரணமென பெண்ணின் உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குமாரவேல் அன்னக்கிளி (54) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது கணவர் எற்கனவே உயிரிழந்த நிலையில், ஐந்து பிள்ளைகளையும் அன்னக்கிளியே தனது உழைப்பில் பராமரித்து வந்தார்.

வறுமை காரணமாக அவர் எற்கனவே சில தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த எப்ரல் 18ம் திகதி கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றார். நான்கு மாதங்களாக உறவினர்களுடன் எந்த தொடர்பும்கொள்ளவில்லை.

எனினும் கொழும்பிலுள்ள முகவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனக்கு வேலையிடத்தில் அதிக துன்புறுத்தல், அதிக வேலை, தன்னை வேறிடத்திற்கு மாற்றும்படி அல்லது நாட்டுக்கு அழைக்கும்படி கேட்டு வந்துள்ளார். எனினும் முகவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்தார் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி அன்னக்கிளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் சவுதி அரேபியாவிலுள்ள உறவினர் ஒருவர், வவுனியாவிலுள்ள உறவினர்களிற்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும், இதை உறுதிசெய்ய முடியாமல், உறவினர்கள் தவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள முகவரை தொடர்பு கொண்டபோது, தமக்கு இது பற்றி தெரியாது என்னும், கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்புகொண்டபோது, அன்னக்கிளி தற்கொலை செய்து நான்கு மாதங்களும் 18 நாட்களுமாகி விட்டது என்ற தகவல் சொல்லப்பட்டது. சடலம் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

பின்னர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கடந்த சனிக்கிழமை சடலம் அதிகாலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெறப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

முகவர் நிறுவனத்தின் அசன்டையீனமே இந்த உயிரிழப்பிற்கு காரணமென குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்பவர்கள் சரியான முகவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.