ஒரே பெண்ணை காதலித்த 3 ஆண்கள் : பொறாமையால் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்!!

341

 

கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர், மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். துபாயில் தந்தை வேலைபார்த்து வரவே, தனது தாய் மும்தாஜ் பேகத்துடன் அவர் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில், திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு முன்தாசர் சென்றுள்ளார். அதன்பின் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக அவர் தனது தாய்க்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதனைதொடர்ந்து இரவு எட்டு மணியளவில், அவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் முன்தாசரை கடத்தியுள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் தரவேண்டுமெனவும் செல்போனில் பேசிய நபர் மிரட்டியுள்ளார்.

முன்தாசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து வந்ததை பொலிசார் கண்டறிந்தனர். இந்த நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில், திருபுவனம் வீரசோழன் ஆற்றின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், முன்தாசரின் சடலம் கிடந்துள்ளது.

மாணவரின் பிரேதத்தை கைப்பற்றிய பொலிசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்தாசரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய பொலிசார், காதல் விவகாரத்தில் முன்தாசர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முன்தாசரின் நண்பர்களான நியாஸ் அகமது, முகம்மது ஜலீல், சலீம் ஆகிய மூவரும் ஒரு பெண்ணை காதலித்த நிலையில், அந்தப் பெண் முன்தாசரை காதலித்ததால் ஆத்திரமடைந்த மூவரும் திட்டமிட்டு அவரை வர வைத்து கழுத்தறுத்துக் கொன்றுள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.