திருகோணமலையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற சர்வதேச விமானம் : தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை!!

255

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் இருந்து இரகசியமான முறையில் சர்வதேச விமானம் ஒன்று வெளியேறியமை தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகர்கள் சிலரை இலங்கைக்கு அழைத்து வந்த விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த தனிப்பட்ட விமானம் கடந்த 3ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்தது. அதில் சிங்கப்பூர் வர்த்தகர்கள் இருவர் மற்றும் சீன வர்த்தகர்கள் மூவருடன் குறித்த விமானம் வருகைத்தந்துள்ளது.

எப்படியிருப்பினும் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பின்னர் திருகோணமலை, சீனன்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வித அனுமதியும் பெறாமல் குறித்த விமானம் திருகோணமலை விமானப்படை முகாமில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு வருகைத்தந்த விமானம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அனுமதிக்கப்பட்ட விமான நிலையத்தில் மாத்திரமே வெளியேற வேண்டும்.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கமைய விமான நிலையம் இல்லாத இடத்தில் இருந்து விமானம் ஒன்று வெளியேறுவதற்கு அனுமதியில்லை. எனினும் இந்த விமானம் திருகோணமலை விமானப்படை முகாமில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

அனுமதியின்றி வெளியேறிய விமானத்தினால் நாட்டில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு இன்றைய தினம் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படும் என விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.