அம்பலமாகும் உண்மைகள்
பதுளையில் ஒன்பது வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமியின் தாய் மற்றும் ஆணொருவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை – ஹாலிஎல, கன்தேகெதர, சார்ணியா தோட்ட பகுதியில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
வவுனியா – செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய், அவரது கணவனை பிரிந்து சந்தேகநபரான ஆணுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், ஐந்து வருடங்களுக்கு முன்பே சிறுமியை அவரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமியின் புதைக்கப்பட்ட உடல் இன்று தோண்டியெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










