சிறுமியின் மரணம்
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச் சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெள்ளம் ஏற்பட்ட வேளை கூட உயிரிழப்பு நேர்ந்திடாத சந்தர்ப்பத்தில் தற்போது இடம்பெற்றுள்ள இச்சிறுமியின் மரணம் குறித்த பிரதேச மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

















