மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

343

 

சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடியபோது, அலையில் அள்ளுண்டுச் சென்ற மாணவனொருவனின் சடலம், நேற்று (11.01) காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செங்கலடி குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செங்கலடி மத்திய கல்லூரியில் எட்டாம் ஆண்டு கல்விகற்கும் ஹரீஸ்வருத்தன், நேற்று முன்தினம் (10.01) காலை பாடசாலை சென்று வீடுதிரும்பியதும், பகலுணவை உட்கொண்டபின் தாயிடம் 100/= ரூபா பணம் பெற்று தலை முடி வெட்டி வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

மாலை 06 மணிவரைக்கும் முடிவெட்டச் சென்ற மகன் வீடு திரும்பாததால், குறித்த சலூனுக்கு சென்று தேடியபோது, முடிவெட்டி சென்றுவிட்டார் என தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அருகாமையிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் மகனை காணக் கிடைக்கவில்லை. இரவெல்லாம் விழித்திருந்து தன் மகனின் வரவுக்காக காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே விடையாக கிடைத்தது.

நேற்று காலை விடயத்தை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், குறித்த மாணவனின் நண்பர்கள் யாரென பொலிஸார் விசாரித்த போது பெற்றோர் மகனின் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரது பெயரை சொன்னதும், குறித்த மாணவர்கள் இருவரையும் காலை பாடசாலை சென்று அதிபரின் அனுமதியுடன் சந்தித்த பொலிசார், மாணவர்களை விசாரித்த போதுதான் விடயம் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் மாணவன் ஹரீஸ்வருத்தன் தலைமுடிவெட்டி வெளியாகியதும், நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து புன்னக்குடா கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும், குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கிவிட்டதால் பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டோம் என்று இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (10.01) மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.