தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர்களாக இருந்து தொழில் போட்டியில் மோதிக்கொண்ட விவேக்கும், வடிவேலும் டுவிட்டரில் சண்டையிட வருகிறார்கள்.
விவேக் ஏற்கனவே டுவிட்டரில் இருக்கிறார். தனது பட விவரங்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் போன்றவை குறித்து டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரது டுவிட்டரில் சேர்ந்துள்ளனர்.
தற்போது வடிவேலுவும், விவேக்கை பின்பற்றி டுவிட்டருக்கு வந்துள்ளார். இவர் இதில் சேர்ந்த சில தினங்களிலேயே ஆயிரக்கண்கான ரசிகர்கள் தொடர்பில் வந்தார்கள். தனது பட விவரங்களை உடனுக்குடன் இதில் வெளியிட இருக்கிறார்.
காமெடியர்களில் சந்தானம் மட்டுமே இதுவரை டுவிட்டரில் சேரவில்லை.
விவேக்கும் வடிவேலும் ஆரம்ப காலங்களில் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு பிரிந்தனர். முன்னணி கதாநாயகர்களுடன் தனித்தனியாக நடித்தார்கள். சந்திரமுகியில் ரஜினியுடன் வடிவேலு நடித்தார். அடுத்து வந்த ரஜினியின் சிவாஜி படம் விவேக் கைக்கு மாறியது. விக்ரமின் கந்தசாமி படத்தில் விவேக் நடிப்பதாக இருந்தது. பிறகு அவரை மாற்றிவிட்டு வடிவேலுவை சேர்த்தனர்.
தனுசின் படிக்காதவன் படத்தில் நடிக்க முதலில் வடிவேலுவை தேர்வு செய்தனர். பிறகு அவரை நீக்கி விட்டு விவேக்கை அழைத்தார்கள். விவேக் நடிப்பதாக இருந்த ஆதவன் பட வாய்ப்பை வடிவேலு தட்டி பறித்தார். இப்படி பட வாயப்புகள் பெறுவதில் கடும் போட்டி நிலவியது.
சூர்யாவுடன் சிங்கம் ஹிட் படத்தில் நடித்த பிறகு விவேக் பத்தாயிரம் கோடி என்ற படத்தில் முக்கிய கரக்டரில் வந்தார். தற்போது பாலக்காட்டு மாதவன், பேசும்படம் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார்.
வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவில் இடைவெளி விழுந்தது. நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகிறது. இரு காமெடியர்களும் டுவிட்டரில் தங்கள் படங்களை விளம்பரபடுத்த திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இருவரது ரசிகர்களும் இதில் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இவர்களுக்குள்ளும் மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்கின்றனர்.