முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்!!

300

முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஜனாதிபதியே எங்களை ஏன் கைவிட்டீர்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? என போராட்டக்காரர்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, போராட்டமே தமிழினத்தின் வாழ்வா, 10 வருட மௌனம் போதும் நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பிய வண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதுடன் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் விசேட பாதுகாப்பு பொலிஸ் படையினர் ஈடுபட்டதாக தெரியவருகிறது.